கொடூரமான இந்தோனேஷியா கடும் விளைவுகளை சந்திக்கும்: அவுஸ்திரேலிய பிரதமர்
http://weligamanewsblog.blogspot.com/2015/04/blog-post_797.html
மரணதண்டனையை நிறைவேற்றிய இந்தோனேஷியா நாடு, விளைவுகளை சந்திக்கும் என்று அவுஸ்திரேலியா பிரதமர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தோனேஷியாவில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அவுஸ்திரேலிய குடியுரிமை பெற்ற இலங்கை தமிழர் மயூரன் சுகுமாறன் மற்றும் ஆண்ட்ரூ சான், பிரேசில் நாட்டை சேர்ந்த ரோட்ரிகோ குலார்ட்டே ஆகியோர் உள்பட 9 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கடைசி நிமிடத்தில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் கைதி மேரியின் மரண தண்டனை மட்டும் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உயிர் பிழைத்தார். இதனையடுத்து தமிழர் மயூரன் சுகுமாறன் உள்பட 8 பேரின் மரண தண்டனை நள்ளிரவில் நிறைவேற்றப்பட்டது.
இந்தோனேஷியாவின் இந்த செயல்பட்டால், அவுஸ்திரேலிய அரசு கோபத்தில் உள்ளது.
இந்தோனேஷியாவுக்கான தனது தூதர் பால் கிப்சனை அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட்(Tony Abbott) திரும்ப அழைத்துள்ளார். கைதி ஒருவருக்காக அவுஸ்திரேலியா தனது தூதரை திரும்ப அழைத்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
இது தொடர்பாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் கூறுகையில், ‘இருவருடைய மரண தண்டனையையும் இந்தோனேஷியா நிறைவேற்றி இருப்பது மிகக்கொடூரமானது.
தேவையற்ற ஒன்று. அவர்கள் சிறையில் மனம் திரும்பி, மறுவாழ்வினை அமைத்துக்கொண்டவர்கள்.
நாங்கள் இந்தோனேஷியாவின் இறையாண்மையை மதிக்கிறோம். அதே நேரத்தில், நடந்ததற்காக கண்டனம் தெரிவிக்கிறோம். இதை வழக்கமான ஒன்றாக எடுத்துக்கொண்டு விட முடியாது என்றும் இதற்கான விளைவுகளை அந்நாடு சந்திக்கும் என்று கூறியுள்ளார்.
