கொழும்பில் நடைபாதை வியாபாரிகளுக்கான தடை நீக்கம்
http://weligamanewsblog.blogspot.com/2015/06/blog-post_51.html
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் நடைபாதை வியாபாரத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடை முற்றாக நீக்கப்பட்டிருப்பதாக கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்தார்.
இதற்கான முழுமையான ஒத்துழைப் பினையும் அனுமதியையும் வழங்கக் கோரி பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்ககோனுக்கு எழுத்து மூலம் அறிவித்திருப்பதாகவும் அவர் கூறினார். இதற்கமைய கடந்த காலங்களைப் போன்று வியாபாரிகள் நடைபாதையில் தமது வியாபாரச் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் வியாபாரிகள் வழக்கம் போல நடைபாதை வியாபாரங்களை முன்னெடுக்க முடியும். பொலிஸார் இதற்கு எந்த வகையிலும் இடையூறு செய்ய மாட்டார்களென்றும் மேயர் தெரிவித்தார். எனினும் கடை உரிமையாளர்கள் சம்மதிக்கும் பட்சத்திலேயே கடைகளுக்கு முன்னால் இவ்வாறான நடைபாதை வியாபாரத்தை முன்னெடுக்க முடியுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த அரசாங்கத்தின் போது நடைபாதை வியாபாரத்திற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டிருந்தது. நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோத்தாபய ராஜபக்ஷவே இந்தத் தடையை கடுமையாக அமுல் படுத்தியதுடன் பொலிஸாரை நடைபாதை வியாபாரிகளை அப்புறப்படுத்தும் பணிகளில் தீவிரமாக களமிறக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
